செய்திகள்

கீரனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆம்புலன்ஸ் மோதல்: முதியவர் பலி

Published On 2016-04-03 19:57 IST   |   Update On 2016-04-03 19:57:00 IST
கீரனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்
கீரனூர்:

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள சீனிவயலை சேர்ந்தவர் ரெங்கராஜ் (வயது 60). இவர் மின்சார வாரியத்தில் ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் சீனிவயலில் இருந்து திருச்சி புறவழிச்சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே திருச்சியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த ஒரு தனியார் ஆம்புலன்ஸ் ரெங்கராஜ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ரெங்கராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் ஆம்புலன்சு ஊழியர் கண்ணன் என்பவரும் லேசான காயம் அடைந்தார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரெங்கராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் வழக்குப்பதிவு செய்து திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவரான சேகரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News