வேடசந்தூர் அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
- பெண்ணை ஆபாசமாக பேசியதால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.
- தற்கொலைக்கு தூண்டிய 2 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகில் உள்ள நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சித்ரா (வயது 26). இவரது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அதே பகுதியை சேர்ந்த கோணமண்டையன் (41), பிரபாகரன் (28) ஆகிய 2 பேரும் மதுகுடிக்க பணம் கேட்டனர். அவர் தன்னிடம் பணம் இல்லை எனக்கூறியதால் அவரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டிவிட்டு சென்று விட்டனர்.
இதை அக்கம்பக்கத்தினர் வேடிக்கை பார்த்ததால் மனமுடைந்த சித்ரா தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோணமண்டையன், பிரபாகரன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன், கலெக்டர் விசாகனுக்கு பரிந்துரை செய்தார்.
கலெக்டர் உத்தரவின் பேரில் பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய 2 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.