செய்திகள்

பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவு -கர்நாடகாவில் இன்று அரசு விடுமுறை

Published On 2019-06-10 14:11 IST   |   Update On 2019-06-10 14:11:00 IST
பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் இன்று அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் கிரிஷ் ரகுநாத் கர்னாட்(81). இவர் கன்னட மொழியின் எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார்.

சமீபத்தில் கன்னடத்திற்கான ஞானபீட விருது பெற்ற ஏழு நபர்களில் இவரும் ஒருவராவார்.  இந்த விருதானது இந்தியாவில் இலக்கியம் சார்ந்தவர்களுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய கெளரவமாகும்.

கர்னாட் நாற்பது ஆண்டுகளாக நாடகங்களை இயக்கி வருகிறார், பெரும்பாலும் தற்காலத்திய பிரச்சனைகளை சமாளிப்பதற்காக வரலாற்றினைப் பயன்படுத்துவார்.

அவருக்கு இந்திய அரசாங்கத்தின் மூலமாக பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் போன்ற கெளரவங்களும் அளிக்கப்பட்டுள்ளன.



தமிழில் காதலன், ரட்சகன், செல்லமே, ஹேராம் போன்ற படங்களில் குணச்சித்தர, வில்லன் ஆகிய வேடங்களில் சிறப்பாக நடித்தவராவார். இந்நிலையில் இன்று காலை வயது முதிர்வின் காரணமாக பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் கிரிஷ் கர்னாட் காலமானார்.

இவருக்கு பல்வேறு திரை உலக பிரபலங்களும், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் கர்நாடக முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி, அரசு நிகழ்ச்சிகள் மற்றும் தான் பங்கேற்கவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் இன்று ரத்து செய்வதாக  அறிவித்தார்.

மேலும் கிரிஷ் கர்னாட்டின் மறைவையொட்டி கர்நாடகாவில் இன்று அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

Similar News