செய்திகள்

துபாயில் உயிரிழந்த ஸ்ரீதேவியின் உடல் நாளை இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது

Published On 2018-02-25 16:19 GMT   |   Update On 2018-02-25 16:23 GMT
துபாயில் மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் நாளை இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #sridevideath #RIPSridevi

துபாய்:

துபாயில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி (54) எமிரேட்ஸ் டவர்ஸ் ஓட்டலில் மாரடைபால் இன்று அதிகாலை மரணமடைந்தார்.

உயிர் பிரிந்த நிலையில்தான் ஸ்ரீதேவியின் உடல் துபாயில் உள்ள ரஷித் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது ஸ்ரீதேவியின் உடல் அல் குவாசிஸ் பகுதியில் உள்ள காவல்துறை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலின் முக்கிய உறுப்புகள் தடயவியில் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

துபாய் நாட்டில் தடயவில் பரிசோதனை முடிவுகள் கிடைத்த பின்னர்தான் பிணவறையில் இருந்து உடல்களை உறவினர்கள் பெற்றுச் செல்ல முடியும் என்ற நிலையில் ஸ்ரீதேவியின் தடயவில் பரிசோதனை முடிவுகள் கிடப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால், இன்று மாலை மும்பைக்கு ஸ்ரீதேவியின் உடலை எடுத்து வருவதில் கால தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், ஸ்ரீதேவியின் பிரேத பரிசோதனை குறித்து முழுமையான அறிக்கை தயாராகாத காரணத்தால், அவரது உடல் நாளை இந்தியாவுக்கு அனுப்பப்படும் எனவும், இறுதிக்கட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த பிறகே அவரது குடும்பத்தாரிடம் ஸ்ரீதேவியின் உடல் ஒப்படைக்கப்படும் என்பதால், இன்று இந்தியாவுக்கு அனுப்ப வாய்ப்பில்லை எனவும் துபாய் போலீசார் தெரிவித்துள்ளதாக ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் அவரது உடல் நாளை இந்தியா கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில், நாளை நடைபெறும் ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்தி விமானம் மூலம் இன்றிரவு மும்பை நகருக்கு புறப்பட்டுச் சென்றார். #sridevideath #dubai #tamilnews
Tags:    

Similar News