செய்திகள்

ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி இடத்தை தக்கவைப்போம்: மாருதி சுசுகி

Published On 2017-10-28 16:42 IST   |   Update On 2017-10-28 16:42:00 IST
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி எலெக்ட்ரிக் கார் பிரிவுகளிலும் முன்னணி இடத்தை பிடிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி தனது காலாண்டு வருவாய் அறிக்கையை சமீபத்தில் அறிவித்தது. சந்தையில் எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையை கடந்து லாபம் ஈட்டியுள்ள மாருதி சுசுகி தனது அடுத்த கட்ட திட்டங்கள் சார்ந்த முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளது.

அதன்படி ஜப்பானை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனம் விரைவில் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பதற்கான பணிகளை துவங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாமல் இருக்க பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் எலெக்ட்ரிக் கார் சந்தையிலும் முன்னணி இடத்தை பிடிப்போம் என மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.

காலாண்டு வருவாய் அறிவிப்பு கூட்டத்தில் பேசிய அந்நிறுவன தலைவர் ஆர்.சி. பார்கவா 'எலெக்ட்ரிக் கார்களை தயாரிப்போம், எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பிலும் முன்னணி இடத்தை பிடிப்போம்.' என தெரிவித்தார்.



எனினும் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பதற்கான பணிகளை துவங்குவதற்கான குறிப்பிட்ட தேதியை அறிவிக்கவில்லை. மாருதி சுசுகியின் சுசுகி நிறுவனமும் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க இருக்கிறது. சுசுகி மோட்டார் கார்ப் நிறுவனத்துடனான கூட்டணியில் மாருதி நிறுவனமும் லாபம் ஈட்டும் என கூறப்படுகிறது.

இரண்டு ஜப்பான் நிறுவனங்களும், எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் முன்னணி இடத்தை பிடிக்க முயற்சித்து வருகின்றன. 2030-ம் ஆண்டு வாக்கில் இந்தியா முழுக்க எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாட்டை அமலாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இது தற்போதைய ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

இந்தியா முழுக்க சுற்றுச்சூழல் சீர்கேடை தவிர்க்கும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் தயாரிப்புகளை குறைக்க ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Similar News