செய்திகள்

ஹோன்டா இரண்டு பிரபல கார்களின் ஹைப்ரிட் மாடல்கள் விரைவில் வெளியாகிறது

Published On 2017-10-27 14:02 IST   |   Update On 2017-10-27 14:03:00 IST
ஹோன்டா நிறுவனம் தனது இரண்டு பிரபல கார்களின் ஹைப்ரிட் மாடல்களை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:

இந்தியாவில் 2030-ம் ஆண்டு வாக்கில் முழுமையான எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தவதற்கான பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இந்திய சந்தைக்கு ஏற்ற எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் பணிகளை துவங்கியுள்ள நிலையில் ஹோன்டா நிறுவனமும் இந்த பட்டியலில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி ஹோன்டா சிட்டி மற்றும் ஜாஸ் கார்களின் ஹைப்ரிட் மாடல்களை ஹோன்டா வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹோன்டா சிட்டி செடான் மற்றும் ஜாஸ் ஹேட்ச்பேக் மாடல்கள் 2020-ம் ஆண்டு வாக்கில் அப்டேட் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து புதிய மாடல்கள் ஹைப்ரிட் பதிப்புகளாக வெளியிடப்படலாம்.

புதிய ஹோன்டா சிட்டி மற்றும் ஜாஸ் மாடல்கள் ஏற்கனவே ஜப்பானில் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு மாடல்களிலும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 108bhp மற்றும் 134Nm செயல்திறன் கொண்டிருக்கிறது. இந்த இன்ஜின்கள் லில்தியம்-அயன் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இவை 29.5bhp மற்றும் 170Nm  செயல்திறன் கொண்டுள்ளது.



இணைக்கப்பட்ட அவுட்புட் 138bhp மற்றும் 170Nm செயல்திறன் கொண்டிருக்கிறது. ஹைப்ரிட் சிட்டி மற்றும் ஜாஸ் மாடல்களில் 7-ஸ்பீடு டுவின்-கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. ஹோன்டாவின் ஹைப்ரிட் மாடல்கள் லிட்டருக்கு 25 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஹைப்ரிட் கார்களும் BS-VI ரக எமிஷன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாடு 2030-ம் ஆண்டில் இருந்து கட்டாயமாக்கப்பட இருப்பதை தொடர்ந்து ஹோன்டா நிறுவனம் புதிய திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. ஹோன்டா மட்டுமின்றி பல்வேறு இதர ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியானது.

Similar News