செய்திகள்
ஆட்சிக்கு வந்து விட்டதுபோல் தி.மு.க.வினர் அராஜகத்தை தொடங்கி விட்டனர்- தினகரன்
மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி கொண்டு வரவும், தொழிற்பேட்டை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், மயிலாடுதுறையில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
ஆட்சிக்கு வந்துவிட்டது போல் தி.மு.க.வினர், அராஜகத்தை தொடங்கி விட்டார்கள். எனவே தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது. அதேபோல துரோக கூட்டணி பணமூட்டையை நம்பி போட்டியிடுகிறது, அவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும். நடைமுறைக்கு சாத்தியம் உள்ள திட்டங்களை மட்டுமே நாங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம். ஜெயலலிதா பெற்றுத்தந்த 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எந்த பாதகமும் ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டும். எந்த ஒரு சமுதாயத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி கொண்டு வரவும், தொழிற்பேட்டை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.