செய்திகள்
பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய ஓ.பி.எஸ்.

தமிழக சட்டசபை கூடியது- இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஓபிஎஸ்

Published On 2021-02-23 05:42 GMT   |   Update On 2021-02-23 07:16 GMT
தமிழக துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.
சென்னை:

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 2-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கி நடைபெற்றது. இந்த நிலையில், 2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது.

கடந்த இரண்டு முறை சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் நடைபெற்றதுபோல், இந்த முறையும் அங்கேயே இடைக்கால பட்ஜெட் கூட்டம் நடைபெறுகிறது. துணை முதலமைச்சரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், தனது வீட்டில் இருந்து பட்ஜெட் ஆவணங்களுடன் கலைவாணர் அரங்கிற்கு புறப்பட்டு வந்தார். முதலில் ஓமந்தூரார் அரசினர் விடுதி அருகே உள்ள ஆலமர இயற்கை விநாயகர் கோவிலுக்கு விநாயகரை வழிபட்டார். 

அதன்பின்னர் 11 மணிக்கு கூட்டத்தொடர் நடைபெறும் கலைவாணர் அரங்கத்தை அடைந்த அவர்,  2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்வது இது 11-வது முறையாகும்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், தற்போது 3 மாத கால செலவினங்களுக்காக  இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்சிக்காலத்தின் கடைசி பட்ஜெட் என்பதால் பல்வேறு சலுகை அறிவிப்புகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் தாக்கல் முடிவடைந்ததும், அது தொடர்பாக நிதித் துறைச் செயலாளர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிப்பார். மேலும், சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுவும் கூடி, சட்டசபை கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்று முடிவெடுக்கும்.
Tags:    

Similar News