செய்திகள்

அ.தி.மு.க. ஆட்சியில் கல்வி வளர்ச்சியில் தமிழகம் முதலிடம்: ஜெயலலிதா பிரச்சாரம்

Published On 2016-05-10 12:42 GMT   |   Update On 2016-05-10 12:44 GMT
அ.தி.மு.க. ஆட்சியில் கல்வி வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக முதலமைச்சர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார்.
அரக்கோணம்:

அரக்கோணத்தில் இன்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஜெயலலிதா  பேசியதாவது:-

ஏழை மக்களின் தரம் உயர்வதற்கு பொருளாதாரம் வளர்ச்சி பெற வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்காக அனைவருக்கும் தரமான கல்வியை அ.தி.மு.க. அரசு வழங்கி உள்ளது. மாணவர்களின் கல்வித்தரம் உயர தொடர்ந்து வழிவகை காணப்படும்.

கல்வி வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது. பள்ளிக்கல்வியில் தமிழகம் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மாணவர்கள் நலன் குறித்த அறிவிப்புகள் அறிவிக்கப்படவில்லை. வெற்று வாக்குறுதிகளே உள்ளன. தி.மு.க. ஆட்சியின்போது மருத்துவ காப்பீட்டு திட்டத்தால் தனியாருக்கு மட்டுமே பயன் கிடைத்தது. தற்போது முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் சிறப்பாக செயல்படுகிறது. தி.மு.க. திட்டத்தை விட எங்களின் திட்டமே சிறந்தது.

அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசால் தாமதம் ஏற்பட்டது. வேலூர் கூட்டு குடிநீர் திடடம் அ.தி.மு.க அரசால் கொண்டு வரப்பட்டது. தி.மு.க. கொண்டு வந்ததாக கூறி வருகின்றனர்.

தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி என்றாலே ஊழல் கூட்டணி என்று பொருள். எங்கு பார்த்தாலும் ஊழல் மயம். ஊழலையே தொழிலாக கொண்டுள்ளது தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி. மக்களால் தண்டிக்கப்பட்ட கூட்டணி. எனவே, இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் ஓட்டு கேட்டு வரும்போது அவர்களை வாக்காளர்கள் விரட்டியடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News