கதம்பம்
ஊஞ்சல் ஆடும் சிறுமி

ஊஞ்சல் ஆடினால் இத்தனை நன்மையா...

Published On 2022-03-26 15:31 IST   |   Update On 2022-03-26 15:31:00 IST
ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் பெருமை மிகு கைங்கர்யங்கள் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது.
வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக்கூடியது ஊஞ்சல்தான்.

முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள்.

பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.

இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.

அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள்.

இடவசதி குறைவாக உள்ளவர்களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன.

ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் பெருமை மிகு கைங்கர்யங்கள் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது.

ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது.

மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றன.

திருமணங்களில் ‘ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.

 ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது.

நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறுசுறுப்பாகிறது.

கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய தலைமுறை இந்த ஊஞ்சல் பயிற்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.

தோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக்கூடியது.

மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும்.

இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுபவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.

ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.

சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்.

கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.

வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.

இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று. இதை ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர்.

-தேன் ராஜன்

Similar News