கதம்பம்
வேலுநாச்சியார்

வேலுநாச்சியாரின் வியத்தகு வீரம்

Published On 2022-01-29 17:57 IST   |   Update On 2022-01-31 14:42:00 IST
“எங்களை நத்திப் பிழைக்க வந்த நீங்கள்தான் எங்களின் தாய் மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர, நாங்கள் உங்கள் மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை” கணீரென்ற ஆங்கிலக் குரலோடு புயலென உள்ளே வந்து நின்றார் அந்தப்பெண்.

சிவகங்கை அரண்மனையில் ஆலோசனை கூட்டம் தொடங்க இருந்தது. ஆங்கிலேயருக்கே இருந்த ஆணவத்தோடு கால்மேல் கால் போட்டு கர்வத்தோடு அமர்ந்திருந்தான் கவர்னர் லாட்டீ காட்.

சிறிது நேரத்தில் சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர் உள்ளே நுழைகிறார். மன்னனைப் பார்த்ததும் இன்னும் அதிகாரத் தோரணை மேலிடுகிறது அவனுக்கு. இன்னும் கொஞ்சம் பின்னால் சாய்ந்து கொண்டு காலை ஆட்டிக்கொண்டே மன்னனைப் பார்க்கிறான்.

 “எங்களுக்குக் கொடுக்க வேண்டிய வரியை வெகுகாலமாகவே நீ கட்டவில்லை. உடனே கட்டிவிடு. இல்லையேல் விளக்கம் கொடு” என ஆங்கிலத்தில் சற்று உரக்கவே சொன்னான். மன்னருக்கு ஆங்கிலம் தெரியாது.

கவர்னருடன் வந்த மொழிபெயர்ப்பாளனோ ஏதும் பேசாமல் அமைதியாக நின்றான். மன்னரால் கவர்னரின் பேச்சைப் புரிந்து கொள்ள இயலாமையைக் கண்டு எகத்தாளச் சிரிப்புடனும் கேலிப்பார்வையுடனும் மன்னனையே பார்த்துக் கொண்டிருந்தான் கவர்னர்.

 “எங்களை நத்திப் பிழைக்க வந்த நீங்கள்தான் எங்களின் தாய் மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர, நாங்கள் உங்கள் மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை” கணீரென்ற ஆங்கிலக் குரலோடு புயலென உள்ளே வந்து நின்றார் அந்தப்பெண். அந்த நிமிடம் கவர்னருக்கு ஆடிப்போய்விட்டது. ஏன் என்று தெரியாமலே எழுந்து நின்றான்.

யார் நீ? என்று கேட்பதற்காக கவர்னர் வாய் திறப்பதற்குள், “உனக்கு ஆங்கிலம் மட்டும்தானே தெரியும்? இதோ இப்பொழுது நான் பேசியதை தெலுங்கில் சொல்கிறேன் கேள். மலையாளத்தில் சொல்கிறேன் கேள். கன்னடத்தில் கூறுகிறேன் கேள். உருதுவில் கூறுகிறேன் கேள்” என அத்தனை மொழிகளிலும் வெடித்துச் சிதறினாள். அறையை விட்டு வெளியே ஓடிவிடலாமா? என்ற எண்ணம் மட்டுமே லாட் டீயின் மனத்தில் இருந்திருக்கும்.

ஆனால் அவள் விட்டபாடில்லை. “இது எங்கள் மண். எங்கள் நாடு. எங்கள் மக்கள். இங்கிருக்கும் ஒவ்வொரு துரும்பும், ஒவ்வொரு அணுவும், எங்களின் உழைப்பைச் சொல்லும்.

எங்கள் மக்களின் உழைப்பாலும், உதிரத்தாலும், வியர்வையாலும் உருவானது எங்கள் நாடு. இங்கே ஓடுகின்ற நதிகளும், நிற்கின்ற மரங்களும், வீசுகின்ற காற்றும், அடிக்கின்ற வெயிலும், பெய்கின்ற மழையும் எங்கள் மண்ணின் பெருமையைச் சொல்லும்.

அன்புக்கு எங்கள் தலை என்றும் குனியும். ஆணவத்தோடு நெருங்கினால் உங்கள் தலை மண்ணில் உருளும்.

எங்கிருந்தோ பிழைக்க வந்த நீ, எங்களிடமே வரி கேட்கின்றாயா? வரி கொடுத்து எமக்குப் பழக்கமில்லை. உதவி என்று கேள். வாரி வாரி வழங்குவோம்” என்று அவள் வாயிலிருந்து புறப்பட்ட அணுகுண்டுச் சொற்களால் நிலைகுலைந்தான் கவர்னர்.

இனியும் இங்கே நின்றால் தம் உயிரும் மிஞ்சாதோ என அஞ்சி, அரண்மனையை விட்டு வெளியேறினான்.

அன்று முத்துவடுகநாதர் அவையில் அன்று வீரமுழக்கமிட்ட பெண், வீரத்தமிழச்சி வேலு நாச்சியார்தான் அந்த வீர மங்கை.

கல்வி, விளையாட்டு, சிலம்பம், வாள் வீச்சு, ஈட்டி எறிதல், அம்பு விடுதல், குதிரை ஏற்றம், யானை ஏற்றம் என அனைத்து ஆயுதப் பயிற்சிகளையும் கற்றுத் தேர்ந்தார்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பிரெஞ்சு, ஆங்கிலம், உருது என 10 மொழிகளை கற்றறிந்த வேலுநாச்சியார், சிறு வயதிலேயே எதற்கும் அஞ்சாத துணிவும், நெஞ்சுரமும் கொண்டவராக திகழ்ந்தார்.

இந்திய விடுதலைப்போர் வரலாற்றில் ஆங்கிலேயரைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றி தம் கொடியை ஏற்றிய ஒரே அரசி!  — சந்திரசேகரன் சுப்பிரமணியம்

Similar News