கதம்பம்
நடுவர் பேராசிரியர் சத்தியசீலன் “அவரின் குற்றச்சாட்டுகளை உண்மையாக இருக்கும் என நினைக்கிறேன்” என பேராசிரியர் அறிவொளியை நோக்கிக் கூறினார்.
ஒரு சமயம் திருச்சியில் பேராசிரியர் சத்தியசீலன் தலைமையில் ‘கர்ணன் குற்றவாளியா? இல்லையா?’ என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெற்றது.
குற்றவாளியே என பேராசிரியர் இராசகோபால் அவர்களும், மறுத்து பேராசிரியர் அறிவொளி அவர்களும் பேசினார்கள்.
கர்ணன் மீது வலுவாக நான்கு குற்றங்களை பேராசிரியர் இராசகோபால் சுமத்தினார்.
நடுவர் பேராசிரியர் சத்தியசீலன் “அவரின் குற்றச்சாட்டுகளை உண்மையாக இருக்கும் என நினைக்கிறேன்” என பேராசிரியர் அறிவொளியை நோக்கிக் கூறினார்.
பேராசிரியர் அறிவொளி எழுந்து, “உண்மையில் பலவிதம் இருக்கு நடுவர் அவர்களே...” என்றார்.
“புரியும்படி சொல்லுங்கள்.. அதென்ன பலவித உண்மை?” என்றார் நடுவர்.
“தெரியாத உண்மை இருக்கிறது, பொய்யான உண்மை இருக்கிறது, புரியாத உண்மை இருக்கிறது” என அடுக்கிக்கொண்டே போக...
“நிறுத்துங்கள் நிறுத்துங்கள்... இரண்டு உதாரணம் கூறுங்கள்” என்றார் நடுவர் சத்தியசீலன்.
“நடுவர் அவர்களே, உலகத்திலேயே மனிதருக்கு ஏற்படும் வலிகளில் வேதனையான வலி எது தெரியுமா...?”
“பிரசவ வலி தான்...”
“தங்களுக்கு அந்த வலி ஏற்பட்டிருக்கிறதா..?” எனக்கேள்வி எழுப்ப, சங்கடத்துடன் புன்னகை புரிந்தவாறே, “இல்லை.. கேள்விப்பட்டது தான்” என்றார்.
அப்படியெனில், “இதுதான் தெரியாத உண்மை” என்றார். கூட்டத்தில் கரவொலி வானை விளந்தது.
அடுத்து, “உலகில் இரண்டு மடங்கு நீரும், ஒரு மடங்கு நிலமும் இருக்கிறது என கூறுகின்றனர்... இல்லையா?”...
“ஆமாம்...”
“இப்ப நீங்க, கடலில் குதிக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம்...”
‘நானா...’
“சரி! நாமிருவரும் என வைத்துக்கொள்வோம். நீருக்கடியில் போக, போக என்ன இருக்கிறது...?”
“நீர் தான்...”
“நீரின் அடியில் என்ன இருக்கிறது?”
“தரை இருக்கிறது...”
“அங்கேயும் நிலம் தானே இருக்கு...?”
“ஆமாம்...”
“அப்போ எப்படி இரண்டு பங்கு நீரும், ஒரு பங்கு நிலமும் இருக்கிறது என்று சொல்வது சரியாகும்...? இதுதான் பொய்யான உண்மை” என்றாரே பார்க்கலாம், அடக்கமாட்டாத சிரிப்புடன் “போதும் போதும்... வழக்காடுங்கள்“ என்றார் நடுவர் சத்தியசீலன்.
-முரளி வெங்கடரமணி