செய்திகள்

தி.மு.க. மாநாட்டு நிகழ்ச்சியை டி.வி.யில் பார்த்து கலைஞர் பரவசம்- மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி

Published On 2018-03-26 12:56 IST   |   Update On 2018-03-26 12:56:00 IST
பெருந்துறையில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டு நிகழ்ச்சிகளை கருணாநிதி டி.வி.யில் பார்த்து மகிழ்ச்சி அடைந்ததாக மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஈரோடு:

பெருந்துறையில் நடந்த தி.மு.க. மண்டல மாநாட்டு பந்தலில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 117 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார்.

மணமக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-

நேற்றைய தினம் நடந்த எழுச்சி மிகு மாநாட்டில் ஒன்றை கூறி கொள்ள முடியவில்லை. இவ்வளவு பெரிய மாநாட்டு பந்தல் அமைய இடம் வழங்கிய உரிமையாளருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நேற்று மாநாட்டில் பேசிய முதன்மை செயலாளர் அண்ணன் துரைமுருகன் பேசும் போது இந்த எழுச்சி மிகு மாநாட்டை பார்க்கும் போது அடுத்த மாநாடு நடத்த இடம் கிடைக்குமா? என்று கேட்டார். அது தான் உண்மை.

மாநாடு நடத்தி முடித்த பந்தலில் இப்போது 117 ஜோடிகளுக்கு திருமணம் நடந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.



மாநாட்டு நிகழ்ச்சிகளை 75 சதவீதம் கலைஞர் சென்னையில் டி.வி.யில் பார்த்து மகிழ்ந்துள்ளார். பரவசம் அடைந்துள்ளார். உடல் நலியுற்ற நிலையில் உள்ள அவருக்கு இது நிம்மதியை கொடுத்துள்ளது.

இங்கு மாலை மாற்றி திருமணம் செய்து கொண்ட மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

தி.மு.க. மாநாட்டில் கலந்து கொள்ள கொடுமுடி பகுதியை சேர்ந்த தொண்டர்கள் வந்த வேன் கவிழ்ந்து 12 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் ஈரோட்டில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த ஆஸ்பத்திரிக்கு மு.க.ஸ்டாலின் சென்று சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

மேலும் தி.மு.க. மாநாட்டிற்கு வந்த நசியனூர் வேல்நகர் பகுதியை சேர்ந்த தங்கமுத்து என்ற தொண்டர் மாரடைப்பில் இறந்தார். அவரது வீட்டிற்கும் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். #Tamilnews

Similar News