செய்திகள்

பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய அழுத்தம் கொடுக்காதது ஏன்?- அமைச்சர்களுக்கு ஈஸ்வரன் கேள்வி

Published On 2018-03-05 14:50 IST   |   Update On 2018-03-05 14:50:00 IST
பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய அழுத்தம் கொடுக்காதது ஏன்? என்று கொங்கு மண்டல அமைச்சர்களுக்கு ஈஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஈரோடு:

ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கொ.ம.தே.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார்.

கொங்கு மண்டலத்தில் தான் அதிக அளவு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. தமிழகத்தின் பாதி வருமானம் கொங்கு மண்டலத்தில் இருந்துதான் வருகிறது. வரியும் இங்கு தான் அதிகம் கட்டுகிறார்கள். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள்.

இங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவு நீர் மூலம் புற்று நோய் அதிக அளவு வரக்கூடியது கொங்கு மண்டலத்தில்தான். அது மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் புதுப்புது நோய்கள் மக்களுக்கு வருகிறது. இ னால் பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது அவசியமாகிறது.


மருத்துவமனை அமைக்க காலம் தாழ்த்துவது கண்டனத்துக்குறியது. அனைத்து கட்சியினரும் எய்ம்ஸ் மருத்துவமனை பெருந்துறையில் அமைய எங்களுடன் போராட முன் வர வேண்டும். இனியும் மருத்துவமனை அமைக்க தாமதமானால் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அனைத்து கட்சியினர், பொதுமக்கள், டாக்டர்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

ஒவ்வொரு அமைச்சர்களும் அந்தந்த மாவட்டத்துக்கு தேவையான திட்டங்களை கேட்டு பெறுகிறார்கள். ஆனால் கொங்கு மண்டல அமைச்சர்கள் பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய அழுத்தம் கொடுக்காதது ஏன்? கட்சி தலைமைக்கு பயந்து அவர்கள் அழுத்தம் கொடுக்காமல் இருக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் கே.கே.சி.பாலு, இளைஞர் அணி செயலாளர் சூர்யமூர்த்தி, தலைமை நிலைய செயலாளர் சுரேஷ், பொன்னுவேல், மாநில தொழிற் சங்க தலைவர் ஜெகநாதன், மாவட்ட செயலாளர்கள் ஈஸ்வர மூர்த்தி, கோவிந்தராஜ், பிரபாகரன், முத்துசாமி, சிவராஜ், மகளிர் அணி தங்க மணி, தமிழரசி, கோகிலா உள்பட பலர் கலந்து கொண்டனர். #Tamilnews

Similar News