செய்திகள்

ஜனவரி மாதத்துக்குள் முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சி முடிந்து விடும்: தினகரன் பேட்டி

Published On 2017-11-23 15:42 IST   |   Update On 2017-11-23 15:42:00 IST
தமிழகத்தில் தற்போது மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது. அது விரைவில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். ஜனவரி மாதத்துக்குள் அது நடக்கும் என்று டி.டி.வி. தினகரன் பேசினார்.
விருத்தாசலம்:

விருத்தாசலத்தில் தீபா பேரவை மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் அ.தி.மு.க. அம்மா அணியில் இணையும் விழா இன்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று காலை திருச்சியில் இருந்து புறப்பட்டு விருத்தாசலம் வந்தார். பாலக்கரை அருகே அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர் தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:-

பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் 1½ கோடி தொண்டர்கள் உள்ளனர். அவர்கள் சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

விரைவில் வர இருக்கின்ற ஆர்.கே.நகர் தேர்தலாக இருந்தாலும் சரி, தமிழகத்தில் நடைபெற உள்ள எந்த தேர்தலாக இருந்தாலும் சரி சசிகலா பொதுச்செயலாளராக தலைமை ஏற்றுள்ள அ.தி.மு.க.வே வெற்றி பெறும்.

தமிழகத்தில் தற்போது மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது. அது விரைவில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். ஜனவரி மாதத்துக்குள் அது நடக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் அங்கிருந்து விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வனின் வீட்டுக்கு சென்றார். அங்கு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Similar News