செய்திகள்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கும் பா.ஜ.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை: வானதி சீனிவாசன்

Published On 2017-09-20 11:10 IST   |   Update On 2017-09-20 11:11:00 IST
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கும் பாரதிய ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஈரோட்டில் வானதி சீனிவான் கூறினார்.
ஈரோடு:

பவானி கூடுதுறையில் நடைபெறும் காவிரி புஷ்கர விழாவில் கலந்து கொள்வதற்காக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் ஈரோட்டுக்கு வந்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கும் பாரதிய ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதனால் பாரதிய ஜனதாவுக்கு எந்த ஆதாயமும் இல்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், காவிரி பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை பெறவும் மத்திய அரசை தமிழக பாரதிய ஜனதா வலியுறுத்தும். நதிகளை இணைக்க மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

கோர்ட்டு உத்தரவுபடி வருகிற கல்வி ஆண்டு முதல் நவோதயா பள்ளிகளை தமிழத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்த வேண்டும்.

நீட் தேர்வு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். வருகிற கல்வி ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சி மையங்கள் அமைத்து பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.

Similar News