செய்திகள்
4 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்வோம்: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
பிளவு ஏற்பட்டாலும் மாற்றுகட்சிக்கு யாரும் செல்லவில்லை, 4 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்வோம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் உட்பட மற்றவர்களின் விடுதலைக்காக சட்டசபையில் சட்டம் கொண்டு வந்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. பேரறிவாளன் உள்ளிட்டோரை தூக்கு தண்டனையில் இருந்து காப்பற்றியதும் அவர்தான்.
நீட் தேர்வு என்பது காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கொண்டு வந்தது. அதனை நாங்கள் தடுத்து நிறுத்த போராடினோம்.
அ.தி.மு.க. என்பது பீனிக்ஸ் பறவை போல. எங்களுக்கு என்றும் அழி வில்லை. அ.தி.மு.க. அரசு மீதமுள்ள 4 ஆண்டுகள் மட்டுமல்ல, வருகிற 2021 சட்டமன்ற தேர்தலிலும் உறுதியாக ஆட்சியை பிடிக்கும். இதில் மாற்றுக் கருத்து இல்லை. கட்சியில் பிளவு ஏற்பட்ட போதும் யாரும் மற்ற கட்சிக்கு செல்லவில்லை.
மேற்கண்டவாறு அவர் கூறினார்.