செய்திகள்

எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் - நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: திருமாவளவன்

Published On 2017-06-15 10:27 IST   |   Update On 2017-06-15 10:27:00 IST
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்கெடுப்புக்காக பேரம் பேசப்பட்டது பற்றி தகவல் கூறப்பட்ட வி‌ஷயத்தில் முதல்-அமைச்சர் தாமாகவே முன் வந்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று திருமாவளவன் கூறி உள்ளார்.
ஈரோடு:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஈரோடு வந்தார். அவர் ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.-

தேசிய அளவில் மருத்துவ கல்லூரிகளில் சேர தகுதி மற்றும் நுழைவு தேர்வு(நீட்) நடத்தப்பட்டது. இந்த தேர்வில் மாநிலத்துக்கு மாநிலம் மாறுப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறி சென்னை உயர்நீதிமன்றம் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்தது.

ஆனால் உயர்நீதி மன்றத்தின் அந்த தடையை நீக்கி தேர்வு முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய அரசு தனது அதிகார பலத்தை மையப்படுத்தி மாநில அரசுகளுக்கான உரிமையை படிப்படியாக பறிக்க முயல்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது.

தற்போது 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து இருப்பதால் மாணவ-மாணவிகள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பொதுத்தேர்வு எழுத வேண்டி உள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு நெருக்கடியும், மன உளைச்சலும் ஏற்படும். எனவே பிளஸ்-2 வகுப்புக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்த வேண்டும். அப்படி இல்லையென்றால் 10-ம் வகுப்புக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்த வேண்டும். பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு “பிரி யுனிவர்சிட்டி” வகுப்புகளாக அறிவித்து செமஸ்டர்(பருவமுறை) தேர்வுகள் கொண்டு வர வேண்டும்.



அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்கெடுப்புக்காக பேரம் பேசப்பட்டது பற்றி தகவல் கூறியதாக கூறப்பட்ட வி‌ஷயத்தில் உரையாடலில் ஈடுபட்டு இருப்பவர் அந்த குரல் அவருடையது இல்லை என்று மறுத்திருக்கிறார். எனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தாமாகவே முன் வந்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் 1¼ லட்சம் விண்ணப்பங்கள் காலியாக உள்ளது. அதற்கு நேர்மாறாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ, பி.காம், பி.எஸ்.சி. போன்ற படிப்புகளுக்கு மாணவர்களிடம் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. 200 இடங்களுக்கு 5 ஆயிரம் விண்ணப்பங்கள் இந்த படிப்புகளுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் மேலும் 20 சதவீதம் இடங்களை அதிகரித்து அரசாணை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News