செய்திகள்

நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று மு.க.ஸ்டாலின் வழக்கு தொடுத்தது சரியானது: முதல்வர் நாராயணசாமி

Published On 2017-02-21 12:57 IST   |   Update On 2017-02-21 12:57:00 IST
நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்திருப்பது சரியானது என புதுவை முதல்வர் நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஆலந்தூர்:

புதுவை முதல்வர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய ஓட்டெடுப்பாக நடத்த உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று சபா நாயகர் அனுமதித்து இருக்க வேண்டும்.

சட்டசபையில் கூச்சல்- அமளி நிலவினாலும் கடும் அமளி ஏற்பட்டாலும் சபை சுமூகமாக நடத்த வேண்டியது சபாநாயகரின் கடமை. பாராளுமன்றத்தில் இதேபோல் அமளி நிலவினால் சபாநாயகர் ஆளுங் கட்சி, எதிர்க்கட்சியை அழைத்து பேசி சபை சுமூகமாக நடத்த நடவடிக்கை எடுப்பார்.

தமிழக சட்ட சபையில் எதிர்க்கட்சிகளை குறிப்பாக தி.மு.க. உறுப்பினர்களை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றிவிட்டு ஆளுங் கட்சி எம்.எல்.ஏக்களை வைத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது சரியல்ல. ஜனநாயகத்துக்கும், சட்டசபை விதிமுறைகளுக்கும் எதிரானது.

நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்திருப்பது சரியானது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News