செய்திகள்

ராம மோகனராவை டிஸ்மிஸ் செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும்: வேல்முருகன்

Published On 2016-12-29 10:21 IST   |   Update On 2016-12-29 10:21:00 IST
தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகனராவை டிஸ்மிஸ் செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
நெய்வேலி:

தமிழக வாழ்வுரிமை கட்சியின் அவசர பொதுக்குழு கூட்டம் நெய்வேலியில் நடைபெற்றது.

இதில் கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கருப்பு பணத்தை ஒழிக்க 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசு தினம், தினம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. இதன் மூலம் இந்த திட்டம் தோல்வி அடைந்துள்ளது என்பது தெரிய வருகிறது. நாடு முழுவதும் வருமான வரி சோதனைகள் நடந்து வருகின்றது.

இந்த சோதனையின் போது பல நூறு கோடி மதிப்பில் புதிய 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் வீட்டில் கோடிக்கணக்கான பணம், நகைகளை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஆனால் அவர் பத்திரிகையாளர்களிடம் இன்னும் தான் தலைமைச் செயலாளராக இருப்பதாக கூறியுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவரை பணிநீக்கம் செய்து 24 மணி நேரத்திற்குள் கைது செய்ய வேண்டும்.

தமிழகத்தில் பருவமழை பொய்த்ததாலும், காவிரி நீரை திறந்துவிடாமல் கர்நாடகா அரசு வஞ்சித்து வருவதாலும், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருகி உள்ளன. இதுவரை 45 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இறந்த விவசாய குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். மேலும் விவசாயிகளின் அனைத்து வகை கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழக அரசு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2,850 அறிவித்துள்ளது. இது போதாது. டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரமாக அறிவிக்க வேண்டும்.

தமிழகத்தில் தற்போது உள்ள நிலையை சாதகமாக பயன்படுத்தி பா.ஜனதா அரசு கொல்லைபுரம் வழியாக உள்ளே நுழைய திட்டமிடுவது போன்று தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News