செய்திகள்

தலைமை செயலகத்தில் சோதனை நடத்தியதற்கு பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை: எச்.ராஜா

Published On 2016-12-27 13:13 GMT   |   Update On 2016-12-28 05:39 GMT
தலைமை செயலகத்தில் சோதனை நடத்தியதற்கு தமிழக முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று எச்.ராஜா கூறினார்.

நெல்லை:

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று நெல்லை வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடியின் நடவடிக்கையான ரூ.1000, 500 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பிற்கும், வங்கிகளில் பணம் எடுக்க விதித்த கட்டுப்பாடுக்கும் ஏழை எளிய மக்கள் வரவேற்பு கொடுத்துள்ளனர். ஆனால் அரசியல் கட்சியினர் கேலி செய்து வேண்டும் என்றே அவதூறு பரப்புகிறார்கள். தமிழகத்தில் வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனை ஆவணங்கள் அடிப்படையில் நடக்கிறது. பாரதீய ஜனதா கட்சி அரசியல் லாபம் கருதி நடக்க வில்லை.

அ.தி.மு.க.வை சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிர மணியன் எம்.பி. தலைமை செயலகத்தில் சோதனை நடத்தியதற்கு மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தது நியாயம் அல்ல. தலைமை செயலகத்தில் சோதனை நடத்தியதற்கு தமிழக முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவர் எதிர்ப்பு தெரிவித்தால் மத்திய அரசு விளக்கம் அளித்திருக்கும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு காங்கிரசும், தி.மு.க.வும் தான் காரணம். தற்போது இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாமல் இருக்கிறது. ஜல்லிக்கட்டு நடைபெற பாரதீய ஜனதா ஆதரவு அளிக்கும்.

தமிழகத்தில் எந்த பொறுப்பிலும் இல்லாத சசிகலாவை தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக துணை வேந்தர்கள் சந்தித்து பேசியது தவறு.

இந்தியாவில் பெரும் பகுதி மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை இல்லாமல் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. தமிழகத்திலும் போதிய மழை இல்லாமல் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News