செய்திகள்

திட்டமிட்டபடி தி.மு.க. பொதுக்குழு நடைபெறுமா?: துரைமுருகன் பதில்

Published On 2016-12-17 02:50 GMT   |   Update On 2016-12-17 04:25 GMT
பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, அதுகுறித்து நாங்கள் யோசித்து அறிவிப்போம் என்று துரைமுருகன் பதில் அளித்தார்.
சென்னை:

கருணாநிதி தலைமையில் வருகிற 20-ந் தேதி சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

உடல்நல குறைவு காரணமாக கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் உடல்நல குறைவு காரணமாக திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறுமா? அதில் கருணாநிதி பங்கேற்பாரா? என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காவேரி ஆஸ்பத்திரியில் கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரித்துவிட்டு வெளியே வந்த சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், தி.மு.க. முதன்மை செயலாளருமான துரைமுருகன் இதுபற்றி நிருபர்களிடம் கூறுகையில், சளி தொல்லை காரணமாக கருணாநிதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் நலமாக உள்ளார். டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து நாங்கள் ஒளிவு, மறைவின்றி வெளிப்படையாக அறிவிப்போம் என்றார்.

இதையடுத்து நிருபர்கள் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்று கேட்டதற்கு, அதுகுறித்து நாங்கள் யோசித்து அறிவிப்போம் என்று துரைமுருகன் பதில் அளித்தார்.

Similar News