செய்திகள்

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க வழக்கு தொடருவேன்: வைகோ பேட்டி

Published On 2016-12-16 05:30 GMT   |   Update On 2016-12-16 10:33 GMT
இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க வழக்கு தொடருவேன் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ராமேசுவரம்:

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 120-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை விடுவிக்க வேண்டும். அங்கு சேதமான படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று ராமேசுவரம் துறைமுக கடற்கரையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்பதற்காக வைகோ இன்று ராமேசுவரம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது;-

தமிழகத்தின் முதுகெலும்பாக உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் இலங்கை கடற்படையால் கேள்விக்குறியாகி உள்ளது. மீனவர்களை தாக்குவதும், சிறைபிடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இலங்கை கடற்படையால் இதுவரை 120-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 18 படகுகள் கடலில் மூழ்கி சேதமடைந்துள்ளது. தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்தும், படகுகளை மீட்பது குறித்து பிரதமர் மோடியிடம் பேசியுள்ளேன்.

படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஆஜராகி வாதாடுவேன். எல்லை தாண்டி மீன்பிடிக்க வரும் தமிழக மீனவர்களுக்கு ரூ.17 கோடி (இலங்கை ரூபாய் மதிப்பில்) அபராதம் விதிக்கப்படுவதற்கான சட்டத்தை இலங்கை அரசு கொண்டு வரஉள்ளது. இதற்கு இந்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக வைகோ, மீனவர்கள் சங்க தலைவர்கள் போஸ், எமரிட், சகாயம், தட்சிணாமூர்த்தி ஆகியோரிடம் கோரிக்கைகள் குறித்து பேசினார்.

Similar News