செய்திகள்

தி.மு.க. போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு இல்லை: தமிழிசை பேட்டி

Published On 2016-11-28 12:55 IST   |   Update On 2016-11-28 14:58:00 IST
தி.மு.க. போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு இல்லை என்று தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியுள்ளார்.

ஆலந்தூர்:

தமிழக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

பாரதீய ஜனதா கட்சியின் அனைத்து மாநில தலைவர்கள் கூட்டம் மற்றும் தீனதயாள் உபாதையா நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள டெல்லி செல்கிறேன்.

கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில் நாட்டு மக்கள் மோடியுடன் தான் உள்ளனர். இதற்கு எதிராக யார்? யார்? போராட்டம் அறிவித்தார்களோ அவர்கள் எல்லோரும் போராட்டத்தை விளக்கி கொள்ளக்கூடிய கட்டாய சூழ்நிலையில் இருக்கிறார்கள்.

பெண்கள் மோடிக்கு எதிராக இருக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறி இருக்கிறார். ஆனால் கருப்பு பண ஒழிப்பு திட்டத்தை பெண்கள் தான் அதிகமாக வரவேற்று இருக்கிறார்கள்.

தமிழகத்தில் வைகோ உள்பட பல தலைவர்கள் மற்றும் நிதீஷ்குமார், அகிலேஷ் யாதவ், சந்திரபாபு நாயுடு ஆகியோர் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையை முதலில் ஏற்றுக் கொள்ள சுணக்கம் காட்டினர். பின்னர் அவர்கள் மோடியுடன் துணையாக நிற்கும் காலத்தின் கட்டாயத்தில் உள்ளனர்.

தி.மு.க.வினர் முதலில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இதில் பலன் எதுவும் இல்லை. இன்று கூட போராட்டம் நடத்துகிறார்கள். அது எந்த விதத்திலும் பலன் தரப்போவது இல்லை. தி.மு.க. நடத்தும் போராட்டங்களுக்கு மக்களிடம் ஆதரவு இல்லை.

ஒருசில இடங்களில் பொது மக்கள் ‘எங்கள் பெயரில் போராட்டம் நடத்தாதீர்கள்’ என்று சுவரொட்டி ஓட்டி இருப்பதை பார்த்தேன். இளைஞர்கள் கூட இணைய தளத்தில் எங்கள் பெயரில் போராட்டம் வேண்டாம், கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு என்று கூறி இருக்கிறார்கள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பணத்தட்டுப்பாடு சீராக 7 மாதம் ஆகும் என்று கூறி இருக்கிறார். அது தவறு. பணத்தட்டுப்பாடு 50 நாட்களில் சரியாகிவிடும் என்று மோடி தெரிவித்து இருக்கிறார். தற்போது நாட்டில் சுமூக சூழ்நிலை திரும்புகிறது.

பாரதீய ஜனதா கட்சி நிலம் வாங்கிவிட்டது. பணத்தை எல்லாம் அதில் முதலீடு செய்து உள்ளனர் என்று பொய்யான குற்றச்சாட்டை திருநாவுக்கரசர் கூறி இருக்கிறார்.

கடந்த 2½ வருடங்களாக நாங்கள் கட்சியை பலப்படுத்தி வருகிறோம். மோடி கருப்பு பண ஒழிப்பு திட்டத்தை அறிவிக்கும் வரையாருக்கும் தெரியாது. மக்கள் இதை உணர்ந்து இருக்கிறார்கள்.

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், ‘கருப்பு பணம் ஒழிப்பு திட்டத்தை முன்பே நாங்கள் சிந்தித்தோம். இந்த திட்டத்தை அமல்படுத்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் என்னை கட்டாயப்படுத்தி இருந்தால் நான் நிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பேன்’ என்று கூறி இருக்கிறார்.

அப்படியானால் நீங்கள் கருப்பு பணம் முதலாளிகளுக்கு துணை நிற்க நிதி அமைச்சராக இருந்தீர்களா?

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News