செய்திகள்

கர்நாடகாவில் வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்ப வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேட்டி

Published On 2016-09-13 10:23 IST   |   Update On 2016-09-13 17:00:00 IST
கர்நாடகாவில் வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்பி அமைதியை நிலை நாட்டவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர்:

சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க பொருளாருமான மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் 4-ந்தேதி தனிப்பட்ட பயணமாக லண்டன் சென்றிருந்தார்.

1 வாரத்திற்கு பிறகு இன்று காலை 8.30 மணிக்கு அவர் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினை நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி நீர் பிரச்சனைக்காக கர்நாடகா மாநிலத்தில் நடந்து வரும் போராட்டத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டு வருவது கவலையளிக்கிறது. இது மாதிரியான பிரச்சனை வரும் என்று அறிந்து ஏற்கனவே தலைவர் கலைஞர் சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியதன் அடிப்படையில் இரு மாநில முதல்-அமைச்சர்களும் கலந்து பேச வேண்டும் என்று கூறி இருந்தார்.

எனவே இனிமேலும் காலம் தாழ்த்தாமல் கர்நாடக மாநிலத்தில் தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசும், பிரதமர் மோடியும் உடனே தலையிட்டு சுமூக நிலையை ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். 2 மாநில முதலமைச்சர்களையும் அழைத்து பேசி ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு கர்நாடகா அரசுக்கு தமிழகத்துக்கு உரிய தண்ணீரை வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்த தீர்ப்பை ஏற்று கர்நாடக அரசு செயல்பட வேண்டும். அதை செயல்படுத்துவதற்கான பொறுப்பும் மத்திய அரசுக்கு உள்ளது.

வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்பி அமைதியை நிலை நாட்டவேண்டும். ராணுவத்தை துணையாக வைத்து தமிழகத்துக்கு முறையாக தண்ணீர் வழங்க வேண்டும். மத்திய அரசுக்கு இதற்கான பொறுப்பு உண்டு.

உச்சநீதிமன்ற தீர்ப்பை இரு மாநில அரசும் நிறைவேற்றும் பொறுப்பு உண்டு. எனவே இரு மாநில முதலமைச்சர்களையும் அழைத்து மத்திய அரசு பேச வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Similar News