செய்திகள்

சட்டசபையில் எதிர்க்கட்சியின் குரலுக்கு ஆளும் கட்சி செவி சாய்ப்பதில்லை: மு.க.ஸ்டாலின் பேட்டி

Published On 2016-09-03 12:49 IST   |   Update On 2016-09-03 12:49:00 IST
சட்டசபையில் எதிர்க்கட்சியின் குரலுக்கு ஆளும் கட்சி செவி சாய்ப்பதில்லை என்று சென்னை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர்:

தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கோவை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கேள்வி:- சட்டசபையில் தொடர்ந்து அமளி ஏற்படுகிறதே?

பதில்:- சட்டசபையில் எதிர்க்கட்சியின் குரலுக்கு ஆளும் கட்சி செவி சாய்ப்பதில்லை. எதிர்க்கட்சிகள் வைக்கக் கூடிய பிரச்சனைகளை சந்திப்பதற்கு வக்கற்ற, திராணியற்ற ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. சட்டசபையில் சம்பந்தம் இல்லாத வி‌ஷயங்களை பேசி கலகத்தை தூண்டுவதே ஆளும் கட்சிதான். இதை மக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள்.

கே:- கோவையில் நீங்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் என்ன?

ப:- சிறுவாணி ஆற்றில் அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசை கண்டித்தும், இதில் தமிழக நலன்காக்க தேவையான நடவடிக்கையை உடனே எடுக்காமல் தூங்கிக் கொண்டிருந்த தமிழக அரசை கண்டித்தும், அணை கட்டுவதை தடுக்கும் படி மத்திய அரசை வலியுறுத்தியும் போராட்டம் நடைபெறுகிறது.

கே- மத்திய அரசை நேரில் சென்று வலியுறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?

ப- தலைவர் கலைஞர் இந்த பிரச்சனையை கூர்ந்து கவனித்து வருகிறார். அதற்கான முடிவை விரைவில் அறிவிப்பார்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Similar News