செய்திகள்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பா.ஜனதா தயார்: இல.கணேசன் பேட்டி

Published On 2016-07-14 15:27 IST   |   Update On 2016-07-15 10:46:00 IST
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பாரதீய ஜனதா கட்சி தயாராக உள்ளது என்று இல. கணேசன் கூறினார்.

கடலூர்:

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் சிதம்பரத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:–

அருணாச்சல பிரதேச மாநில விவகாரத்தில் அரசியல் சாசனத்தின்படி பெரும்பான்மை பலம் பெற்ற ஒருவரை ஆட்சி அமைக்க மாநில ஆளுநர் அழைக்கிறார்.

பின்னர் அந்த அரசில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் விலகியதால் பெரும்பான்மையை இழந்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமைகிறது. ஆனால் அது தவறு என தற்போது நீதிமன்றம் கூறி உள்ளது.

இது பெரும்பான்மையை இழந்து விட்ட ஒரு முதல்– அமைச்சரை மீண்டும் முதல்–அமைச்சர் ஆவதற்கு வசதி செய்து கொடுத்தது போல் உள்ளது. இதனால் சட்டமன்றத்தை கூட்டி மீண்டும் பெரும்பான்மை இல்லாமல் போய், குதிரை பேரம் நடப்பதற்கு வழி வகுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும். நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்புடையதாக இல்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு உள்நோக்கம்தான் கற்பிக்கக் கூடாது. ஆனால் தீர்ப்பை விமர்சிக்கலாம்.

இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி குறை கூறி இருப்பது ஏற்புடையதல்ல. எமர்ஜென்சியை காங்கிரஸ் கொண்டு வந்தபோது நாடாளுமன்றத்தையோ, அமைச்சரவையையோ காங்கிரஸ் கலந்து ஆலோசிக்க வில்லை. 3 பேர் சேர்ந்து கையெழுத்திட்டதில் என்ன ஜனநாயகம் காக்கப்பட்டது.

ஆட்சியில் இருந்தபோது எண்ணற்ற மாநில அரசுகளை காங்கிரஸ் அரசு கலைத்தது. ஜனநாயகத்திற்கும் காங்கிரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ராகுல்காந்தி பொறுப்போடு பேச வேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பாரதீய ஜனதா கட்சி தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News