லைஃப்ஸ்டைல்
வீட்டுக்கு வண்ணம் பூசுகிறீர்களா?

வீட்டுக்கு வண்ணம் பூசுகிறீர்களா?- பெண்கள் கவனிக்க வேண்டியவை

Published On 2020-05-11 03:10 GMT   |   Update On 2020-05-11 03:10 GMT
பெண்களே வீட்டில் உள்ள அறைகளில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்பதை முன்கூட்டியே ஆராயுங்கள். அந்த பொருளின் வண்ணத்துக்கு ஏற்ப வண்ணங்களை தேர்வு செய்யலாம்.
ஒரு காலத்தில் ஒரே நாளில் வீட்டுக்கு வெள்ளை அடித்துவிடுவார்கள். பெரும்பாலும் சுண்ணாம்பு பூச்சாக இருக்கும் என்பதால் அதற்கு ஒரு நாளே போதுமானதாக இருந்தது. இப்போது அப்படியல்ல. ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு வண்ணம் பூசுகிறார்கள்.

எனவே வண்ணம் பூசுவதற்கு எத்தனை நாட்கள் தேவைப்படும் என்பதை முதலிலேயே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். ஒரே நாளில் முழு வீட்டுக்கும் வண்ணம் பூச போகிறோமா, தவணை விட்டு அறை அறையாக வண்ணம் பூசப்போகிறோமா என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும்.

பெண்களே வீட்டில் உள்ள அறைகளில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்பதை முன்கூட்டியே ஆராயுங்கள். அந்த பொருளின் வண்ணத்துக்கு ஏற்ப வண்ணங்களை தேர்வு செய்யலாம். இதுதொடர்பாக இணையதளத்தில் பயனுள்ள தகவல்கள் கிடைக்கின்றன. மேலும் சந்தையில் கிடைக்கும் பெயிண்ட் குறித்தும் விசாரியுங்கள். அளவு, தரம், வண்ண பொருத்தம் ஆகிய ஆலோசனைகள் சந்தையில் கிடைக்கும்.

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தால் வீட்டின் உள்பகுதியை பற்றி மட்டும் யோசித்தால் போதுமானது. தனி வீடாக இருந்தால் வெளிப்புறத்துக்கு வண்ணம் பூசுவது குறித்தும், மழை, வெயிலில் தாங்கும் அளவுக்கு வண்ணம் பூசுவது பற்றி திட்டமிடுவதும் நல்லது. சுவர்களை அளந்தால் எவ்வளவு பெயிண்ட் தேவைப்படும் என்பதை முன்கூட்டியே அறியலாம். சிலர் பெயிண்ட்டை அதிகமாக வாங்கிவிட்டு அதை வீணாக்கிவிடுவார்கள். இதை தவிர்க்க முன்கூட்டியே திட்டமிடலாம். சுவரின் மேற்பரப்பு எந்த இயல்பில் உள்ளது என்பதை பொறுத்தும் பெயிண்டின் அளவும், வகையும் மாறுபடும். ஒரு வேளை ஏற்கனவே இருந்த வண்ணத்தையே மீண்டும் அடிக்க விரும்பினால், குறைவான அளவு பெயிண்ட்தான் தேவைப்படும்.

பெயிண்ட் அடிக்கப்போகும் சுவரில் ஏற்கனவே வெளிர் நிறத்தில் வண்ணம் பூசியிருந்தால், குறைவான அளவு பெயிண்ட்டே தேவைப்படும். அடர் நிறமாக இருந்து, புதிய வண்ணம் பூச விரும்பினால், புதிய பெயிண்ட்டை இரண்டு முறை பூச வேண்டியிருக்கும். வண்ணம் பூச தொழிலாளர்களை அழைத்தால், வண்ணம் பூசுவதற்கு தேவைப்படும் எல்லா பொருட்களையும் கொண்டு வந்துவிடுவார்கள்.

ஒரு வேளை நீங்களே பெயிண்ட் அடிக்க முடிவு செய்தால், வீட்டில் சில பொருட்களை வைத்திருப்பது நல்லது. ஏணி, பெயிண்ட்டையும் பிரைமரையும் கலக்க காலி டப்பாக்கள், சுவர்கள் மற்றும் மேற்கூரையை சுத்தப்படுத்த உப்புத்தாள், தரையில் சிந்தும் பெயிண்ட் துளிகளை துடைக்க துணி, தரமான பிர‌‌ஷ், ரோலர்கள், ஸ்ப்ரே கன் ஆகியவை வேண்டும். வண்ணம் பூசுவதற்கு முன்பு சுவரை உப்புத்தாள் கொண்டு தேய்க்க வேண்டும். பலரும் இப்படி செய்யமாட்டார்கள். பழைய வண்ணத்தை முழுமையாக அகற்றினால்தான் புதிய வண்ணம் பூசும்போது நன்றாகச் சுவரில் ஒட்டும்.

சுவர்களில் விரிசல் இருந்தால் வண்ணம்பூசுவதற்கு முன்பே அதை சரிசெய்துவிடுங்கள். சுவர் மற்றும் மேற்கூரைகளுக்கு வண்ணம் பூசிய பின், கதவு, ஜன்னல்களுக்கு வண்ணம் பூசலாம்.
Tags:    

Similar News