சமையல்

சன்டே ஸ்பெஷல்: இறால் தம் பிரியாணி செய்யலாம் வாங்க...

Published On 2024-05-26 05:56 GMT   |   Update On 2024-05-26 05:56 GMT
  • வெங்காயம் பொன்னிறமானவுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  • எண்ணெய் பிரிந்து வந்தவுடன், அரைத்த முந்திரியை சேர்க்கவும்

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 500 கி

இறால் - 500 கி

வெங்காயம் - 2

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 3

எலுமிச்சை பழம் - 1/2

தயிர் - 1 கப்

மிளகாய் தூள் - 2  ஸ்பூன்

பிரியாணி மசாலா - 1 ஸ்பூன்

புதினா - சிறிதளவு

கொத்தமல்லை - சிறிதளவு

முந்திரி (அ) பாதாம் பருப்பு - 10 (சுடுநீரில் ஊற வைத்து அரைக்கவும்)

இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

தாளிக்க

பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை

செய்முறை:

இறாலை நன்கு கழுவி உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பிரியாணி மசாலா சேர்த்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி ஊற வைத்த இறாலை பொரித்து எடுக்கவும்.

அதே எண்ணெயில் கூடுதலாக எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து பொரிய விடவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயத்தை பொன்னிறமாக வதக்க வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமானவுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் தக்காளி, பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியவுடன் அதனுடன் புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும்.

பின்னர் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கிளறி, தயிரை சேர்த்து கிளறி விடவும். அதில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை மிதமான தீயில் வைக்கவும்.

எண்ணெய் பிரிந்து வந்தவுடன், அரைத்த முந்திரியை சேர்க்கவும். முந்திரி சேர்த்தவுடன் கிரேவி கெட்டியாக மாறும். அதனால் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். பின்னர் பொரித்து வைத்துள்ள இறால் சேர்த்து, எலுமிச்சை சாறு சேர்த்து மிதமான தீயில் வைக்கவும்.

வேறொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, ஊற வைத்த பிரியாணி அரிசி, உப்பு, பிரிஞ்சி இலை, சிறிதளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும். அரிசி குழையாமல், வெந்து இருந்தால் போதும். இந்த பதத்தில் வடித்து உதிரியாக எடுத்துக்கொள்ளவும்.

பின்னர் இறால் கலவையில் வேக வைத்த சாதத்தை சேர்த்து மெதுவாக உடையாமல் கிளறி விடவும். சாதத்தை ஒன்றாக்கி அதன் மேல் கொத்தமல்லி, புதினா தூவி 10 நிமிடம் மூடி வைத்து தம் போடவும். தம் போட ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மூடி மேல் வைக்கலாம்.

10 நிமிடம் ஆனவுடன் அடுப்பை அணைத்து விடவும். மேலும் 10 நிமிடம் கழித்து திறக்கவும். சுவையான இறால் தம் பிரியாணி ரெடி.

Tags:    

Similar News