லைஃப்ஸ்டைல்
நீரிழிவு நோயாளிகள் கால்களில் பிரச்சினை வருவதை தடுக்கும் வழிகள்

சர்க்கரை நோயாளிக்குரிய காலணிகள்

Published On 2020-06-05 08:55 GMT   |   Update On 2020-06-05 08:55 GMT
நீரிழிவு நோயாளிகள் கால்களில் பிரச்சினை வருவதை தடுக்க அதற்குரிய காலணிகளை அணியும் போது பாதங்களுக்கு ஏற்றதாகவும், பாதங்கள் காயங்கள் ஏற்படுவதில் இருந்தும் காக்கப்படுகின்றன.
சர்க்கரை நோய் என்று அழைக்கப்படுகிற நீரிழிவு நோய் கால்களில் பல பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதனால் உணர்வு இழப்புகள், குறிப்பாகப் பாதங்களில் ஏற்படும் சிறு காயங்களைக்கூட உணர முடியாமல் போகின்றன. இதன் காரணமாக பாதங்களில் புண்களும், தொற்றுகளும் ஏற்படுவதை தடுக்க முடியாமல் போகிறது.

இதுபோன்ற பிரச்சினைகளை தடுக்க அதற்குரிய காலணிகளை அணியும் போது பாதங்களுக்கு ஏற்றதாகவும், பாதங்கள் காயங்கள் ஏற்படுவதில் இருந்தும் காக்கப்படுகின்றன. இதுபோன்ற சிறப்பு காலணிகளை தேர்வு செய்வதற்கு முன்பு எந்த வகையான சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளது என்பதை டாக்டருடன் அல்லது பாத நோய்களை குணப்படுத்தும் டாக்டருடன் ஆலோசிக்க வேண்டும். தற்போது சந்தையில் நீரிழிவு நோயாளிகளுக்காக சிறப்பு காலணிகள் ஏராளமாக விற்கப்படுகின்றன. இதை வாங்குவதற்கும் இப்போது பரிந்துரைக்கப்படுகிறது. இந்த வகை காலணிகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் பாதங்களை பாதுகாக்கும் வகையிலும், நமது உயரத்துக்கு ஏற்பவும் உள்ளன.

நீரிழிவு நோயாளிகள் தங்கள் பாதங்களில் பிரச்சினைகள் உள்ளனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும். பாதங்களில் காயங்கள் ஏற்படாமல் இருக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதங்களில் உணர்வுகள் குறைவது, பாத வடிவத்தில் மாற்றம், கால்களில் ஏற்படும் புண்கள் அல்லது ஆறாத புண்கள் இருந்தால் உடனடியாக டர்க்டரை அணுக வேண்டும்.

நீரிழிவு தற்போது எங்கும் வியாபித்திருக்கும் ஒரு நோயாக உள்ளது. எனவே விழிப்புடன் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுவதன் மூலம் அதன் வீரியத்தை குறைத்து நம் கால்களில் ஊனம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். கால்களில் எந்த பிரச்சினையும் இல்லாவிட்டாலும்கூட மருத்துவரையோ அல்லது பாத நோய்களை குணப்படுத்தும் நிபுணரையோ சந்தித்து வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.
Tags:    

Similar News