பெண்கள் உலகம்
ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரசின் ஆயுள் என்ன?

ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரசின் ஆயுள் என்ன?

Published On 2020-04-24 14:27 IST   |   Update On 2020-04-24 14:27:00 IST
ரூபாய் நோட்டுகள், முகக் கவசம், டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றில் கொரோனா வைரசின் ஆயுள் குறித்து ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.
கொரோனா வைரஸ் பீதி காரணமாக, பலரும் பிறரிடம் இருந்து ரூபாய் நோட்டுகளை வாங்குவதற்கே தயங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், ரூபாய் நோட்டுகள், முகக் கவசம், டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றில் கொரோனா வைரசின் ஆயுள் குறித்து ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.

மக்கள் தற்போது அன்றாடம் அதிகம் பயன்படுத்தும் பொருட்களில் டிஷ்யூ பேப்பர், முகக் கவசம், ரூபாய் நோட்டுகள் ஆகியவை உள்ளன.

இவற்றில், முகக் கவசத்தில் கொரோனா வைரஸ் 7 நாட்கள் வரையும், ரூபாய் நோட்டுகள், எவர்சில்வர், பிளாஸ்டிக் பொருட்களில் சில நாட்கள் வரையும் உயிர் வாழும் என ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பிரபல மருத்துவ இதழான ‘தி லான்செட்’டில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.

அதேசமயம், வீடுகளில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகள் அல்லது சோப்பை உபயோகித்து கொரோனா வைரசை கொன்றுவிடலாம் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அச்சடிக்கப்பட்ட காகிதம், டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றில் கொரோனா வைரஸ் மூன்று மணி நேரத்துக்கும் குறைவாகவே உயிர்வாழ முடியும் என்றும், மரப்பலகை, துணிகளில் இரண்டு நாட்கள் வரை உயிரோடு இருக்க வாய்ப்புள்ளதாகவும் லியோ பூன் லிட்மன், மாலிக் பெரிரிஸ் என்ற இரு விஞ்ஞானிகள் ஏற்கனவே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News