உடற்பயிற்சி

வயிற்றில் கட்டிகள், குடல் புற்றுநோய் வராமல் தடுக்க யோகா முத்திரை

Published On 2022-07-08 04:37 GMT   |   Update On 2022-07-08 04:37 GMT
  • மனித உடலில் ஜீரண மண்டலம் மிக முக்கியமானது.
  • நாம் உண்ணும் உணவின் சத்து ரத்தத்துடன் சேர வேண்டும்.

இன்று நம் நாட்டில் வயிற்றில் கட்டிகள், குடல் புண், குடலில் புற்றுக்கட்டிகள் என்பது ஆண்களுக்கும், பெண்களுக்கும் அதிகமாக வருகின்றது. இதற்குரிய காரணங்களை நாம் முதலில் தெரிந்து கொள்வோம். பின்பு இதற்குரிய யோகப்பயிற்சிகளையும் காண்போம்.

மனித உடலில் ஜீரண மண்டலம் மிக முக்கியமானது. நாம் உண்ணும் உணவு அதன் தரம், தன்மையை பொறுத்துதான் ஜீரண மண்டலம் சிறப்பாக இயங்கி, சத்து, அசத்தை பிரிக்கும். அதற்கு நுரையீரல், சிறுகுடல், பெருங்குடல் சரியாக இயங்க வேண்டும். ஒரு மனிதனுடைய உடலில் காலை - மாலை இருவேளையும் கழிவுகள் (மலம்) சரியாக வெளியேற வேண்டும். நாம் உண்ணும் உணவின் சத்து ரத்தத்துடன் சேர வேண்டும். அசத்து தனியாக வெளியேற வேண்டும். அதற்கு நாம் எடுக்கும் உணவு சாத்வீகமாக இருக்க வேண்டும்.

மைதாவினால் ஆன உணவுகள்,அசைவம் போன்ற உணவுகளை அடிக்கடி உட்கொண்டால் ஜீரண மண்டலம் பாதிக்கும். குடலில் புண்கள் ஏற்படும், குடலில் கழிவுகள் தங்கி அது கட்டிகளாக மாறும். பசிக்கும் பொழுது சாப்பிட வேண்டும். பசியறிந்து சாப்பிடவேண்டும். பசிக்கும் பொழுது சாப்பிடாததும், பசியில்லாத பொழுது சாப்பிடுவதும் ஜீரண மண்டலத்தை பாதிக்கும்.

முடிந்த அளவு பழவகைகள், காய்கறிகள் உணவில் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள், பசிக்கும் பொழுது பசியறிந்து சாப்பிடுங்கள். பொதுவாக நிறைய நபர்கள் எனக்கு அதிக காரமாக சமைத்தால்தான் பிடிக்கும் என்பார்கள். தொடர்ந்து அதிக காரமான உணவினை உண்பதால் நாளாக நாளாக சிறுகுடல், பெருங்குடல் இயக்கம் பாதிக்கும். புண்கள் வரும். பின்பு கழிவுகள் சரியாக வெளியேறாமல் ஜீரண மண்டலம் பாதிக்கப்படும். கட்டிகளாக வயிற்றில் குடல் பகுதி வால்வு பகுதியில் உருவாகும். அதனால் பசி இருக்காது. அடிக்கடி வயிற்று வலி ஏற்படும். சாப்பிட்டவுடன் வயிறு வலிக்கும். இதற்கெல்லாம் காரணம் அதிக காரம் சாப்பிடுவது. அதிக உப்பு, அதிக புளிப்பு உணவில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

சூரிய முத்திரை

விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். மோதிர விரலை மடக்கி அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் செய்யவும்.

மாதங்கி முத்திரை

விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இரு கைவிரல்களை கோர்த்து நடுவிரல் மட்டும் படத்தில் உள்ளது போல் நேராக சேர்த்து வைக்கவும். கையை வயிற்றுக்கு நேராக சேர்த்து வைக்கவும். காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும்.

மாதுளம் பழம், கொய்யா பழம் ,உணவில் அடிக்கடி எடுக்கவும். வேப்ப இலை கொழுந்து 15 நாட்களுக்கு ஒரு முறை காலை வெறும் வயிற்றில் ஒரு பிடி சாப்பிடவும். வல்லாரை கீரை, பொன்னாங்கண்ணி கீரை, மணத்தக்காளி கீரை உணவில் எடுக்கவும்.

பெ.கிருஷ்ணன்பாலாஜி, M.A.(Yoga)

63699 40440

pathanjaliyogam@gmail.com

Tags:    

Similar News