வடபழனி முருகன் கோவிலில் 8 ஆயிரம் மின் விளக்குகளால் அலங்காரம்
- நாளை முதல் 7-ம்தேதி வரை 8 ஆயிரம் மின் விளக்குகளை கொண்டு சிறப்பு அலங்காரம்.
- 6-ம்தேதி மூலவர் செண்பகப் பூ அலங்காரத்தால் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
சென்னையில் உள்ள புகழ் பெற்ற வடபழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலின் மூலவர் சன்னதி சுற்றுச்சுவரில் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 7-ம்தேதி வரை 8 ஆயிரம் மின் விளக்குகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட உள்ளது.
அத்துடன், திருகார்த்திகை தினம் அன்று (6-ம்தேதி) மூலவர் செண்பகப் பூ அலங்காரத்தால் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அன்றைய தினம் வள்ளி தேவசேனா சன்னதி உள்ளே 36 குத்துவிளக்குகள், கோவில் வளாகத்தில் 108 குத்து விளக்குகள் ஏற்றப்பட்டு, வெகு விமரிசையாக கார்த்திகை தீப விழா கொண்டாடப்பட உள்ளது. பக்தர்கள் தரிசனத்திற்கு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
பத்தர்களுக்கு வேண்டிய குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், துணை ஆணையர் முல்லை உள்ளிட்ட செய்து வருகின்றனர்.