வழிபாடு

பெரிய சேஷ வாகனத்தில் உற்சவர்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

திருச்சானூரில் சுந்தரராஜசாமி அவதார மகோற்சவம் தொடக்கம்

Published On 2023-07-08 04:34 GMT   |   Update On 2023-07-08 04:34 GMT
  • இன்று இரவு அனுமன் வாகன வீதிஉலா நடக்கிறது.
  • நாளை இரவு கருட வாகன வீதிஉலா நடக்கிறது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சுந்தரராஜசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அவரின் அவதார மகோற்சவம் 3 நாட்கள் நடக்கின்றன. தொடக்க நாளான நேற்று மதியம் 2 மணியில் இருந்து மாலை 3.30 மணி வரை கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணசாமி முக மண்டபத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, சுந்தரராஜசாமிக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய சுகந்த திரவியத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6.15 வரை சுந்தரராஜசாமிக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை பெரிய சேஷ வாகனச் சேவை நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, சுந்தரராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

சுந்தரராஜசாமி அவதார மகோற்சவத்தின் 2-வது நாளான இன்று (சனிக்கிழமை) இரவு அனுமன் வாகன வீதிஉலா, 3-வது நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு கருட வாகன வீதிஉலா நடக்கிறது. அதில் உற்சவர் சுந்தரராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

இந்த மகோற்சவத்தையொட்டி கோவிலில் 3 நாட்களுக்கு பத்மாவதி தாயார் ஊஞ்சல் சேவையை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

Tags:    

Similar News