வழிபாடு

திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா தொடங்கியது

Published On 2022-12-03 06:53 GMT   |   Update On 2022-12-03 06:53 GMT
  • 10-ந்தேதி தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
  • 11-ந்தேதி பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது.

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகு ஸ்தலம் நாகநாதர் கோவில் உள்ளது. ராகு சுசீல முனிவர் அளித்த சாபத்தால் மானுட பாம்பாக திரிந்து மகா சிவராத்திரி அன்று நாகநாதரை வழிபட்டு சாபம் நீங்க பெற்ற சிறப்பு பெற்ற தலம் இந்த கோவில் ஆகும். பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஆலயத்தில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பஞ்ச மூர்த்திகள் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். பின்னர் கொடி மரத்துக்கு அபிஷேகங்கள் நடைபெற்றது.

பின்னர் விசேஷ ஆராதனைகளைத் தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் தினசரி காலை பல்லக்கிலும், இரவு வெள்ளி ஐந்துதலை நாக வாகனம், பூத வாகனம், சிம்மம், கிளி , வெள்ளி ரிஷபம், யானை, அன்னம், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடக்கிறது.

10-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7:30 மணிக்கு மேல் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 11-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனங்களில் மங்கள வாத்தியங்கள் முழங்க வீதி உலா நடக்கிறது. காலை 9 மணிக்கு கோவில் வளாகத்தில் தமிழகத்திலேயே முதன்முறையாக 50 நாதஸ்வர வித்வான்கள் 50 தமிழ் வித்வான்கள் இணைந்து மல்லாரி இசை வாசிக்கப்படுகிறது. வீதி உலா முடிந்து பஞ்சமூர்த்திகள் சூரிய புஷ்கரணி முன்பு எழுந்தருளி தீர்த்துவாரி நடக்கிறது. தேரோட்டம் மற்றும் தீர்த்தவாரி நடைபெறும் இரண்டு தினங்களிலும் ஆலய நிர்வாகத்தின் சார்பில் சுமார் 2ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கூடுதல் பொறுப்பு தா. உமாதேவி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News