வழிபாடு

திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் உடைமாற்றும் அறை அமைத்து தர கோரிக்கை

Published On 2022-09-23 05:58 GMT   |   Update On 2022-09-23 05:58 GMT
  • இங்கு ஆண்டு தோறும் சுமார் 500-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்கிறது.
  • இக்கோவிலில் பக்தர்களுக்கென எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.

திருச்சிற்றம்பலத்தில் பழமை வாய்ந்த புராதனவனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் நிர்வாகம் தமிழக இந்து சமய அறநிலைய ஆட்சி துறையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. திருச்சிற்றம்பலத்தை சுற்றியுள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது இஷ்ட தெய்வமாக புராதனவனேஸ்வரரையும், பெரியநாயகி அம்மனையும் வழிபட்டு வருகின்றனர். திருமண தடை நீக்கும் தலமாக இந்த கோவில் விளங்குவதால் ஆண்டு தோறும் சுமார் 500-க்கும் மேற்பட்ட திருமணங்கள் இங்கு நடைபெறுகிறது.

இக்கோவிலில் பக்தர்களுக்கென எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. குறிப்பாக திருமணம் நடைபெறும் நேரங்களில் மணமக்கள் உடைமாற்றும் அறை இதுவரை அமைத்து கொடுக்கப்படவில்லை. இதனால் திருமணம் செய்து கொள்ள வரும் மணமக்களும், அவரது உறவினர்களும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள திருக்குளத்தில் வெளியூர்களிலிருந்து வரும் எண்ணற்ற பக்தர்கள் நீராடி விட்டு சாமியை வழிபட செல்கின்றனர். அவ்வாறு வரும் பெண் பக்தர்களும் உடை மாற்றும் அறை இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே இனியும் தாமதிக்காமல் கோவில் வளாகத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மணமக்கள் உடை மாற்றும் அறையும், திருக்குளத்தின் குறிப்பிட்ட கரையில் பக்தர்கள் உடைமாற்றும் அறையும் அமைத்து தர வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு திருச்சிற்றம்பலம் பகுதி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News