வழிபாடு

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் பாலாலயம்

Published On 2022-08-23 04:14 GMT   |   Update On 2022-08-23 04:14 GMT
  • 11 கலசங்கள் நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
  • திருப்பணி வேலைகள் நடைபெறுவதற்கான பாலாலய பூஜை தொடங்கியது.

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் 2008-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகள் முடிந்தும் கும்பாபிஷேகம் நடைபெறாததால் திருப்பணி வேலைகளை விரைவில் தொடங்கி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில் கோவிலில் உள்ள ராஜகோபுரம், விமானங்கள், திருப்பணி வேலைகள் நடைபெறுவதற்கான பாலாலய பூஜை தொடங்கியது. இதையொட்டி யாகசாலை அமைக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தம், கும்பஅலங்காரம், ராஜகோபுரம் விமானங்கள், தீபாராதனை நடைபெற்றது.

நேற்று அதிகாலை விநாயகர் வழிபாட்டுடன் யாகசாலை பூஜை மீண்டும் தொடங்கியது. யாக சாலையில் மரத்திலான ராஜகோபுரம் மாதிரி வடிவத்திற்கு பால், பன்னீர், திரவியம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகம் மற்றும் யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த 11 கலசங்கள் நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து கும்ப நீர் மூலஸ்தானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பாலாலய பூஜைகள் அனைத்தும் அதிகாலை 5.40 மணிக்குள் முடிவுற்றது. இதில் கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News