சீனிவாசமங்காபுரம் கோவிலில் சாத்காத்கார வைபவ உற்சவம் நிறைவு
- உற்சவர் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- இன்று பார்வேடு உற்சவமும், ஆஸ்தானமும் நடக்கிறது.
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் 3 நாட்கள் சாத்காத்கார வைபவ உற்சவம் நடந்து வந்தது. அதன் நிறைவு விழா நேற்று நடந்தது. அதையொட்டி நேற்று அதிகாலை மூலவரை சுப்ர பாதத்தில் துயிலெழுப்பி தோமால சேவை, கொலு, பஞ்சாங்க சிரவணம், சஹஸ்ர நாமார்ச்சனை நடந்தது.
காலை 10 மணியில் இருந்து பகல் 11 மணி வரை கோவிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரருக்கு பால், தயிர், தேன், மஞ்சள், சந்தனம், இளநீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை உற்சவருக்கு ஊஞ்சல் சேவை நடந்தது.
இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை கருட வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதில் அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை சீனிவாசமங்காபுரத்தை அடுத்த ஸ்ரீவாரிமெட்டு அருகில் உள்ள பார்வேடு மண்டபத்தில் பார்வேடு உற்சவமும், ஆஸ்தானமும் நடக்கிறது.