வழிபாடு

ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வேல் வைத்து பூஜிக்கப்படுவதை படத்தில் காணலாம்.

சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில்ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வேல் வைத்து பூஜை

Published On 2023-02-28 05:11 GMT   |   Update On 2023-02-28 05:11 GMT
  • கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி முதல் நெற்கதிர் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது.
  • எந்தக் கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் கொங்குமண்டலத்தில் முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். நாட்டில் வேறு எந்தக் கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது.

சுப்பிரமணியசாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக்கூறி அதை கோவில் முன்மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் சாமியிடம் பூப்போட்டு அதன் பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள்.

அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை உத்தரவு பெட்டியில் அந்தப் பொருள் வைக்கப்பட்டிருக்கும். உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்தப் பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர் மறையாகவும் இருக்கலாம்.

கடந்த காலங்களில் சைக்கிள் வைத்து பூஜிக்கப்பட்ட போது நவீன வாகனங்களின் பெருக்கத்தால் சைக்கிளின் பயன்பாடு குறைந்து போனது. துப்பாக்கி தோட்டா வைத்து பூஜிக்கப்பட்ட போது கார்கில் போர் ஏற்பட்டு அதில் இந்தியா, பாகிஸ்தானை வென்றது.

இந்நிலையில் சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாத சிவாச்சாரியார் (வயது 63) என்ற பக்தரின் கனவில் உத்தரவான வேல் நேற்று முதல் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி முதல் நெற்கதிர் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது.

Tags:    

Similar News