வழிபாடு

சோலைமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழாவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி

Published On 2023-02-05 04:35 GMT   |   Update On 2023-02-05 04:35 GMT
  • பக்தர்கள் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
  • விசேஷ பூஜைகள் மஹா தீபாராதனைகள் நடந்தது.

முருகப் பெருமானின் ஆறாவதுபடை சோலைமலை முருகன் கோவில் பிரசித்தி பெற்ற அழகர் மலையில் அமைய பெற்றுள்ளது. இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழாவும் சிறப்புடைய ஒன்றாகும். இந்த விழாவானது கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக மூலவர் சன்னதியில் வித்தக விநாயகர், மூலவர் சுவாமி, மற்றும் வேல்சன்னதியிலும் விசேஷ பூஜைகள் மஹா தீபாராதனைகள் நடந்தது. அன்று பூத வாகனத்தில் சாமி புறப்பாடு நடந்தது. தொடர்ந்து தினமும் அன்னம் காமதேனு, ஆட்டு கிடாய், பூச்சப்பரம், யானை, பல்லாக்கு, குதிரை ஆகிய வாகனங்களிலும், தங்க தேரோட்டமும், வெள்ளி மயில் வாகன புறப்பாடும் நடந்தது.

நேற்று முக்கிய நிகழ்வாக தைப்பூச விழா நடைபெற்றது. இதில் சிவாச்சாரியார்களின், வேத மந்திரங்கள் முழங்க தீர்த்தவாரி மற்றும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி மேளதாளம் முழங்க தீவட்டி, வர்ணக்குடை பரிவாரங்களுடன் கோவில் உள் பிரகாரத்தில் புறப்பாடு நடந்தது.

பின்னர் அங்குள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் சுவாமிக்கு பால் பழம், பன்னீர், உள்பட 16 வகையான அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். இத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும். கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News