வழிபாடு

பழனி முருகன் கோவிலில் விளக்கு பூஜை

Published On 2023-01-04 04:44 GMT   |   Update On 2023-01-04 04:44 GMT
  • முருகப்பெருமானுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பழனி முருகன் கோவிலில், ஒவ்வொரு தமிழ் மாதமும் கார்த்திகை உற்சவ விழா நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று மார்கழி மாத கார்த்திகை உற்சவ விழா நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடந்தது. பின்னர் 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சந்நியாசி அலங்காரம், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரம் நடைபெற்றது. அதையடுத்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரமும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகாள் அலங்காரமும் நடைபெற்றது. அதன்பிறகு மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் முருகப்பெருமானுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

மாலை 6 மணிக்கு மேல் மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் 108 விளக்கு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து 6.40 மணிக்கு சின்னக்குமாரர் உட்பிரகாரத்தில் உலா வந்தார். தொடர்ந்து 7 மணிக்கு மேல் தங்கரதத்தில் எழுந்தருளி தங்கரத புறப்பாடு நடந்தது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

கார்த்திகை உற்சவத்தையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் படையெடுத்தனர். இதனால் கிரிவீதி, சன்னதிவீதி, பாதவிநாயகர் கோவில், மின்இழுவை ரெயில்நிலையம், படிப்பாதை, ரோப்கார் நிலையம் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கார்த்திகை உற்சவ விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News