மாசி திருவிழா: பழனி மாரியம்மன் கோவிலில் கம்பம் சாட்டும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது
- கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் நிகழ்ச்சி 28-ந்தேதி நடைபெறுகிறது.
- மார்ச் 7-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
- 8-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
பழனி முருகன் கோவிலின் உபகோவிலான மாரியம்மன் கோவில் பழனி கிழக்கு ரதவீதியில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் அம்மன் லிங்க வடிவத்தில் அமைந்திருப்பது சிறப்பு அம்சமாகும். இங்கு ஆண்டுதோறும் மாசி திருவிழா 21 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 17-ந்தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கம்பம் சாட்டுதல் இன்று (செவ்வாய்க்கிழமை) மாரியம்மன் கோவிலில் நடைபெறுகிறது. இதையொட்டி அம்மன் உத்தரவுபடி திரிசூல வடிவிலான கம்பம் வெட்டி எடுத்து வரப்படும். பின்னர் அது அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்யப்பட்டு கோவில் முன்பு நடப்படும். அதைத்தொடர்ந்து தினந்தோறும் பக்தர்கள் மஞ்சள்நீர், பால் கொண்டு வந்து கம்பத்துக்கு ஊற்றி வழிபடுவர்.
விழாவுக்கான கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் நிகழ்ச்சி வருகிற 28-ந்தேதி நடைபெறுகிறது. அடுத்த மாதம் 7-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று இரவு அம்மன் தங்ககுதிரை வாகனத்தில் உலா வந்து அருள்பாலிக்கிறார். 8-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அடுத்த நாள் கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.