வழிபாடு

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு 250 டன் எடையில் புதிய தேர் வடிவமைப்பு

Published On 2023-02-09 06:21 GMT   |   Update On 2023-02-09 06:22 GMT
  • ஆதிகும்பேஸ்வரர் சாமி கோவில் தேர் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது.
  • 4 ஆண்டுகளாக மாசிமக திருவிழா தேரோட்டம் நடைபெறவில்லை.

கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் சாமி கோவில் மாசி மக திருவிழா தேரோட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தொழில் அதிபர் ராயாகோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் பேசியதாவது:-

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் சாமி கோவில் தேர் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. இதனால் தேரின் அனைத்து பகுதிகளும் சிதிலமடைந்து, சிற்பங்கள் பழுதாகி தேரோட்டம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. 4 ஆண்டுகளாக மாசிமக திருவிழா தேரோட்டம் நடைபெறவில்லை.

இதையடுத்து பக்தர்கள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்துசமய அறநிலையத்துறை அனுமதியின்பேரில் கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்கள் மூலமாக ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சாமிக்கு புதிய திருத்தேர் வடிவமைக்க முடிவு எடுக்கப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் புதிய தேர் கட்டுமானப்பணிகள் தொடங்கியது.

இந்த புதிய தேர் 250 டன் எடையில், 27 அடி உயரத்தில், 16 அடி அகலத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. திருத்தேர் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் வருகிற மாசி மக திருவிழாவின்போது தேரோட்டம் நடத்த தேவையான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்தாலோசனை கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தேர் உபயதாரர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Similar News