வழிபாடு
null

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நடை திறக்கும் நேரம் மாற்றம்

Published On 2022-11-14 13:02 IST   |   Update On 2022-11-14 13:09:00 IST
  • கன்னியாகுமரியில் சபரிமலை ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.
  • வருகிற 17-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வசதியாக தினமும் அதிகாலை4.30மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல தினமும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக வருகிற 16-ந்தேதி திறக்கப்படுகிறது. அன்று முதல் தமிழ்நாடு கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டு கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வது வழக்கம். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் கன்னியாகுமரிக்கு வந்து முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை வழிபடுவது வழக்கம்.

இதனால் அன்று முதல் கன்னியாகுமரியில் சபரிமலை ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க கோவிலின் நடை திறக்கும் நேரத்தை நீட்டிக்க குமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.

அதன்படி வருகிற 17-ந்தேதி முதல் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசனையொட்டி பக்தர்களின் தரிசனத்துக்கு வசதியாக பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படும் நடை மதியம் 1 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. அதேபோல இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 9 மணிக்கு அடைக்கப்படுகிறது.

Tags:    

Similar News