திருப்பதியில் பலத்த மழை: பக்தர்கள் சிரமத்துடன் சாமி தரிசனம்
- வைகுண்டம் காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
- குளிர் காற்று வீசி வருவதால் நடுங்கியபடி தரிசனத்திற்கு காத்திருக்கின்றனர்.
திருப்பதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து மழை பெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. தற்போது திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகின்றனர்.
வைகுண்டம் காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. திரளான பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
தொடர்ந்துமழை பெய்து வருவதால் பக்தர்கள் மழையில் நனைந்தவாறு தரிசனத்திற்கு சென்றனர். அதேபோல் தரிசனம் முடித்து வெளியே வந்த பக்தர்களும் மழையில் நனைந்தவாறு சென்றனர்.
மேலும் குளிர் காற்று வீசி வருவதால் நடுங்கியபடி தரிசனத்திற்கு காத்திருக்கின்றனர்.
இதனால் பக்தர்கள் கடும் அவதியடைந்தனர்.
திருப்பதியில் நேற்று 62,351 பேர் தரிசனம் செய்தனர். 31,473 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.99 கோடி உண்டியலில் காணிக்கை வசூலானது.