வழிபாடு

பிரமோற்சவ கொடியேற்று விழா நடைபெற்ற காட்சி.

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2023-05-16 06:12 GMT   |   Update On 2023-05-16 06:12 GMT
  • மே 30-ந்தேதி காலை தேரோட்டம் நடக்கிறது.
  • ஜூன் 1-ந்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.

காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இத்தகைய சிறப்புவாய்ந்த சனீஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு இன்று காலை 5.30 மணி அளவில் ரிஷப வானத்தில் கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதனை தொடர்ந்து கொடிமரத்து விநாயகருக்கு திரவியப்பொடி, மஞ்சள், பால், சந்தனம் இளநீர் விபூதி, பழரசம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், அதனை தொடர்ந்து புனிதநீர் கொண்டு அபிஷேகமும் நடைபெற்றது.

தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, மங்கல வாத்தியங்கள் இசைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் கொடிமரத்தில் கொடியை ஏற்றினர். அதனைத் தொடர்ந்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, மே 23-ந் தேதி அடியார்கள் நால்வர் புஷ்பப் பல்லக்கில் வீதியுலாவும், மே 30-ந் தேதி காலை தேரோட்டமும், 31-ந் தேதி சனீஸ்வரர் பகவான் தங்க காக வாகனத்தில் சகோபுர வீதியுலாவும், ஜூன் 1-ந் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையில், ஊழியர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

விழாவை முன்னிட்டு இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறுக்கு வருகை தருவார்கள் என்பதால் அவர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர், சாலை சீரமைத்தல், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்ட வருகின்றது.

Tags:    

Similar News