திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் ஐப்பசி திருவிழா ஆராட்டுடன் நிறைவு
- சங்குமுகம் கடற்கரையில் ஆராட்டு நடைபெற்றது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மற்றும் ஐப்பசி மாதங்களில் ஆராட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் இவ்வாண்டின் ஐப்பசி ஆராட்டு திருவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது. விழாவின் 9-ம் நாளான நேற்று முன் தினம் இரவு 9 மணிக்கு பள்ளி வேட்டை நடைபெற்றது.
விழாவின் நிறைவு நாளான நேற்று சங்குமுகம் கடற்கரையில் ஆராட்டு நடைபெற்றது. இதையொட்டி மாலை 5 மணிக்கு ஆராட்டு ஊர்வலம் கோவிலின் மேற்கு வாசலில் இருந்து புறப்பட்டது.
ஊர்வலத்தின் முன்பு யானைகள், குதிரைகள் அணிவகுத்து சென்றன. அதைத்தொடர்ந்து பல்லக்குகளில் சாமி மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்த ஊர்வலம் இரவு 7 மணிக்கு சங்குமுகம் கடற்கரையில் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி ஆராட்டு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.