வழிபாடு
திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி

Published On 2022-05-18 04:43 GMT   |   Update On 2022-05-18 04:43 GMT
தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருவையாறு தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை விழா கடந்த 5-ந்தேதி தொடங்கியது. விழாவையொட்டி கடந்த 9-ந்தேதி மாலை தன்னைத்தானே பூஜித்தல் நடந்தது.

அன்று 6 ஊர்களிலிருந்து சாமிகள் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நடந்த தேரோட்டத்தில் ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் தேரில் அமர்ந்து பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா வந்தது.

இதில் திருவையாறு தேவஸ்தான டிரஸ்டி கட்டளை சுவாமி கார்ப்பார் சொக்கநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு வீதி வந்து நிலையடி வந்தவுடன் காவேரி ஆற்றில் வாணவேடிக்கையும், கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான விழா நேற்றுமுன்தினம் நடந்தது. விழாவையொட்டி காலை 5.30 மணிக்கு ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி சென்று, இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமித்தது.

நேற்று தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அதன்பிறகு 6 ஊர் பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றது.

விழா ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாசாரிய சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி தேவஸ்தான டிரஸ்டி கார்ப்பார் சொக்கநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை துணை போலீஸ் சூப்பிரண்டு  ராஜ்மோகன் தலைமையில் இன்ஸ்பெக்டர்  சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் செய்திருந்தனர். சப்தஸ்தான விழாவையொட்டி காவேரி ஆற்றில் வாணவேடிக்கையும், நாட்டுப்புற இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
Tags:    

Similar News