வழிபாடு
திருவையாறு ஐயாறப்பர் கோவில் சப்தஸ்தான விழா

திருவையாறு ஐயாறப்பர் கோவில் சப்தஸ்தான விழா

Published On 2022-05-17 06:51 GMT   |   Update On 2022-05-17 06:51 GMT
திருவையாறு ஐயாறப்பர் கோவில் சப்தஸ்தான திருவிழாவில் இன்று(செவ்வாய்க்கிழமை) தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்களும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவையாறு தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை விழா கடந்த 5-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 5-ந்தேதி கொடியேற்றம் நடந்தது.

9-ந்தேதி மாலை தன்னைத்தானே பூஜித்தல் நடைபெற்றது. அன்று 6 ஊர்களிலிருந்து சாமிகள் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. அப்போது அறம்வளர்த்த நாயகியுடன் ஐயாறப்பார் தேரில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. தேரோட்டத்தின் போது பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திருவையாறு தேவஸ்தான டிரஸ்டி கட்டளைசுவாமி கார்ப்பார் சொக்கநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு வீதி வந்து தேர் நிலையடி வந்தவுடன் காவேரி ஆற்றில் வாணவேடிக்கையும், கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி காலை 5.30 மணிக்கு ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி சென்று நேற்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமித்தது. அப்போது தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வாணவேடிக்கை நடைபெற்றது.

விழாவில் இன்று(செவ்வாய்க்கிழமை) தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்களும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாராதனை காண்பிக்கப்பட்டு அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும்.

விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாசாரிய சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி தேவஸ்தான டிரஸ்டி கார்ப்பார் சொக்கநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் செய்திருந்தனர்.
Tags:    

Similar News