வழிபாடு
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு வனத்துறை கேட் வழியாக செல்லும் பக்தர்கள்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2022-05-13 13:29 IST   |   Update On 2022-05-13 13:29:00 IST
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக பொருட்களை கொண்டு பிரதோஷ சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த திரளான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.

காலை 6.30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்றனர்.

பின்னர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக பொருட்களை கொண்டு பிரதோஷ சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்பு சுவாமிக்கு பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இந்த பிரதோஷ வழிபாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Similar News